ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கடலுார்: கடலுாரில் அரசியல் கட்சியினர் இன்று நடத்த இருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரயில் நிலையங்களில் பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். விழுப்புரம்-தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில்பாதைக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தி.மு.க.,-மா.கம்யூ.,-இந்திய கம்யூ., வி.சி., கட்சி-காங்., மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் இன்ற 27ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாதவன், காங்., ரங்கமணி வி.சி.க.,, திருமார்பன், இந்திய கம்யூ., மணிவண்ணன், அனைத்து குடியிருப்போர் சங்கம் மாதவன் மற்றும் பொது நல அமைப்பினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்காததால் போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு, ஆர்.டி.ஓ., கேட்டுக் கொண்டார். அதன்பேரில் போராட்டக்குழுவினர், போராட்டத்தை தற்காலிக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

Advertisement