தேசிய அளவில் 3வது அணி உதயம்?

3

- நமது நிருபர் -

தேசிய அரசியலில் புதிய கூட்டணி உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வியடைந்து ஆட்சியை பறி கொடுத்ததோடு, அக்கட்சி தலைவர் ஸ்டாலினும், சென்னை கொளத்துார் தொகுதியில் தோல்வியடைந்தார்.

கேரள தேர்தலில், அம்மாநிலத்தை ஆட்சி செய்த பினராயி விஜயன் தலைமை யிலான இடதுசாரி கூட்டணி தோல்வியடைந்தது .

கடந்த 2025ல், டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தோற்று, ஆட்சியை இழந்ததோடு, அக்கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும், தான் போட்டியிட்ட புதுடில்லி தொகுதியில் தோல்விஅடைந்தார்.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியில் இருந்து ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் வெளியேறி விட்டனர். 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தால், 'கரப்பான் பூச்சி ஜனதா' என்ற கட்சி, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஸ்டாலினுக்கு பாராட்டு



தனியார் 'டிவி' நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கேவிடம், 'இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார்' என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், 'தமிழக பொருளாதார செயல்பாடுகளில் ஸ்டாலினும், கேரளா சுகாதார சீர்திருத்தங்களில் பினராயி விஜயனும், டில்லி அரசு பள்ளிகளில் கல்வி பணியில் கெஜ்ரிவாலும் சிறந்த முதல்வர்களாக பணியாற்றினர்' என பதிலளித்தார்.

அவரது கருத்தை விமர்சித்துள்ள, பா.ஜ., முன்னாள் நிர்வாகி ஷெசாத் பூனாவாலா, 'சிறந்த முதல்வர்கள் என்றால், அவர்களை, மக்கள் நிராகரித்தது ஏன்' என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதே நேரத்தில், ஆட்சியை இழந்த ஸ்டாலின் பெயர் , அபிஜித்தின் பாராட்டால் தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியின் பொருளாதார செயல்பாடுகளை, தேசிய அளவில் பிரசாரமாக எடுத்துச் செல்ல, தி.மு.க., -எம்.பி.,க்கள் திட்டமிட்டு உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், தேசிய அளவில் தங்களுக்கான ஆதரவை தேட, இந்த பாராட்டை பயன்படுத்த உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும், டில்லி மற்றும் பஞ்சாபில் செல்வாக்கை காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தி.மு.க., - ஆம் ஆத்மி தேசிய அளவில் பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு எதிராக தி.மு.க.,வும் ஆம் ஆத்மி கட்சியும் செயல்படுகின்றன. எனவே, மா.கம்யூ., உள்ளிட்ட ஒரே கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணியாக, புதிய கூட்டணி உதயமாகும் என கூறப்படுகிறது.

அக்கூட்டணி வாயிலாக , வரும் 2029 லோக்சபா தேர்தலை சந்திக்க, தி .மு.க., ஆம் ஆத்மி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவரின் பாராட்டு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement