ஆகாஷை அடித்து கொன்ற போலீஸ் குற்றப்பத்திரிகையில் சி.பி.சி.ஐ.டி., தகவல்

2

சென்னை: 'ஆகாஷ் டெலிசன் என்ற, 26 வயது இளஞரை, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என தெரிந்து இருந்தே, போலீசார் அடித்து கொன்றுள்ளனர்' என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், 26, கடந்த மார்ச் 5ம் தேதி இரவு, மானாமதுரை சீயோன் நகரில் இருவரை வெட்டிய வழக்கில், அம்மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியதால், பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதனால் காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது; அங்கு அவர் உயிரிழந்தார்.

இதனால், ஆகாஷ் டெலிசனை அடித்து கொன்று விட்டதாக, போலீசார் மீது, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:

ஆகாஷ் டெலிசன் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என தெரிந்தே, எஸ்.ஐ., குகன், 35, போலீஸ்காரர்கள் காளீஸ்வரன், 37, மகேந்திரன், 33, தேவேந்திரன், 38, பழனியப்பன், 40 ஆகியோர், உயிர் போகும் அளவுக்கு அடித்து கொன்றுள்ளனர்.

போலீஸ் வாகனத்தில், கடந்த மார்ச், 6ம் தேதி ஆகாஷ் டெலிசனை, யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக அடித்து உள்ளனர்.

வலது முழங்காலுக்கு கீழும், கணுக்காலுக்கு மேலேயும் இரும்பு கம்பியால் அடித்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கடுமையாக அடித்ததால் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement