மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

குளித்தலை: குளித்தலை அடுத்த கள்ளை கிராமத்தில், மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குளித்தலை அருகே, தோகமலை யூனியன் கள்ளை பஞ்., பேரூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்தின் கீழ், பொதுவான உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்தும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் தொல்காப்பியன் தலைமை வகித்தார். கரூர் டி.ஆர்.ஓ., விமல்ராஜ் பங்கேற்று, அரசின் செயல்பாட்டு விதிமுறைகள் குறித்து பேசினார். நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர், திட்டத்தின் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் விளக்கினார்.
இதையடுத்து, கள்ளை ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள், தங்களது பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்தது. விவசாயம், கால்நடைகளை நம்பி பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். புதியதாக மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால், மக்கள், கால்நடைகள், விளை நிலங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் எங்கள் ஊராட்சிக்கு தேவை இல்லை என, எழுத்து பூர்வமாகவும் தெரிவித்தனர்.
தமிழர் தேசம் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அருள்,'இத்திட்டத்தால் கிராம மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. அடிப்படை வசதி கேட்டு போராடி வருகிறோம், இப்
பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை,' என்றார்.
கருத்து கேட்பு கூட்டத்தில் தாசில்தார் சந்தன செல்வன், டி.எஸ்.பி., மணிகண்டன் மற்றும் வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், கள்ளை, கூடலுார், நல்லுார் பஞ்., சுற்றுப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement