சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை

2

சென்னை: சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சந்தோஷ், 90 சதவீத உடல் ஊனத்தை கடந்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்க்கை பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகநாதன் -- பானுப்ரியா தம்பதியின் மகன் சந்தோஷ், 17. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்.

இவர், அத்திப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 600க்கு 531 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் சென்னை ஐ.ஐ.டி., சார்பில் நான்கு மாத பயிற்சி பெற்றார்.

தகுதித் தேர்வில் தேர்வாகி, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு இல்லாமல், சென்னை ஐ.ஐ.டி.,யில் நான்கு ஆண்டு பி.எஸ்., தகவல் அறிவியல் பாடப் பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளார்.

இதுகுறித்து, சந்தோஷின் தாய் பானுப்ரியா கூறியதாவது: என் மகன் 90 சதவீத இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. கடந்த 12 ஆண்டுகளாக தினசரி பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கேயே காத்திருந்து, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வருவேன்.

மாற்றுத்திறனாளி என்ற நிலையை கடந்து, பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போது, சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர அவருக்கு இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement