தேர்தலில் போட்டியிட ரூ.2 கோடி பேரம்? த.வெ.க., நிர்வாகியின் ஆடியோ வைரல்

12

பல்லடம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, 2 கோடி ரூபாய் செலவாகும் என திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் சங்கர் மற்றும் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக இருவரும் பேசுகின்றனர்.

அதில், ''நீ இப்போதே பணம் தர மாட்டேன் என்கிறாய். தேர்தலில் போட்டியிட ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டால் எப்படி கொடுப்பாய்?'' என சங்கர் கூறுகிறார். மேலும், பல்லடம் எம்.எல்.ஏ., ராம்குமாரை பாலசுப்பிரமணியம் சந்திக்கச் சென்றது தொடர்பாகவும் ஆடியோவில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் நேற்று மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.

அவர் அளித்த மனு:


பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் சங்கரிடம் பேசியபோது, ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு 2 கோடி ரூபாய் வேண்டும் என்றும், ஏற்கனவே கேட்ட ஒரு லட்சம் ரூபாயையே தரவில்லை என்றும் கூறினார்.

இந்த உரையாடலை யாரோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்ட அலுவலகத்துக்கு வரவழைத்து, ஆடியோவை வெளியிட்டது பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி எனக் கூறி மிரட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வைத்தனர். இதனால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் சங்கர் கூறுகையில், ''மற்ற கட்சியினர் தேர்தலுக்கு ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றனர் என்றுதான் பேசினேன். அதை நான் 2 கோடி ரூபாய் கேட்டதாக தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ., ராம்குமார் எனது உடன்பிறவா சகோதரர் போன்றவர். ஆடியோவை தவறாக பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement