இது முதல்முறையல்ல... நேபாளத்தை கடந்த 5 ஆண்டுகளில் தாக்கிய பேரழிவுகள்...!
காத்மண்டு: நேபாளத்தின் புவியல் அமைப்பே, அங்கு பேரிடர்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்து வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பேரழிவுகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை காண்போம்.
உயர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகளைக் கொண்ட நேபாள நாடு இமயமலைக்கு மத்தியில் அமைந்துள்ளது. எனவே, அடிக்கடி பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்து வருகிறது. நேற்று கூட, ரசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 160 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். இந்த வெள்ளப்பெருக்கினால் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், சேதத்தின் முழுமையான மதிப்பீடும் இன்னும் கணக்கிடப்படவில்லை.
நேபாளம் அடிக்கடி பேரழிவுகளை சந்திக்கும் நாடாக இருந்து வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளில் அதிக சேதங்களை ஏற்படுத்திய நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்புகள் குறித்து தற்போது காணலாம்.
2025 ஜூலையில்...
ஒரு வருடத்திற்கு முன்பு, நேபாளத்தில் மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால், இதே போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ரசுவா மாவட்டம் பேரழிவை சந்தித்தது. இந்த வெள்ளம் நேபாளம் - சீனா எல்லை இணைப்பான ரசுவாகதியில் உள்ள மிதேரி பாலத்தை அடித்துச் சென்றதுடன், சுங்கப் பகுதி மற்றும் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காணாமல் போனதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 800க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
2024 செப்டம்பரில்...
கடந்த 2024 செப்டம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெய்த தொடர் கனமழையினால், நேபாள வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெள்ளப் பாதிப்பை சந்தித்தது. இதில், 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பலி எண்ணிக்கை 246ஆக பதிவாகியது. மேலும் 183 பேர் காயமடைந்தனர். 18 பேரைக் காணவில்லை. 17,000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.இந்த வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
2023 ஜூன் மற்றும் ஜூலை...
2023 ஜூனில் பெய்த பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நேபாளத்தின் கிழக்கு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சங்குவாசபா, தப்லெஜுங், பஞ்ச்தார் மற்றும் இலாம் உள்ளிட்ட கோஷி மாகாணத்தில் பெரும் பேரழிவுகள் ஏற்பட்டன. நேபாள போலீசாரின் தகவலின்படி 6 பேர் உயிரிழந்தனர். 29 பேரைக் காணவில்லை. இந்த வெள்ளத்தால் வீடுகள், பாலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த வெள்ளம் நேபாளப் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியான நீர்மின் உள்கட்டமைப்புகளையும் பாதித்தது.பல திட்டங்களும் அவற்றுக்கான வழிகளும் சேதமடைந்தன. இந்த பருவமழை காரணமாக, ஜூலை 18ம் தேதி நிலச்சரிவு காரணமாக குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். 25 பேரைக் காணவில்லை என்றும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2022 அக்டோபரில்...
2022 அக்டோபர் மாதம் நேபாளம் மற்றொரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவைச் சந்தித்தது. குறிப்பாக கர்னாலி ஆற்றுப்படுகை மற்றும் நாட்டின் மேற்குப் பகுதிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுதுர்பஸ்சிம் மற்றும் லும்பினி மாகாணங்களில் இந்தப் பேரழிவு மிகவும் கடுமையானதாக இருந்தது. இதில் 36 உயிர்கள் பறிபோயின. 80,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் தொங்கு பாலங்கள் சேதமடைந்தன. இதனால் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவது கடினமாகியது.
அதே பருவமழை மேற்கு நேபாளத்தின் பிற பகுதிகளிலும் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. செப்டம்பரில் தார்சுலாவில் வெள்ளமும், அச்சாத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டு மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
2021 ஜூனில்....
கடந்த 2021ம் ஆண்டு ஜூனில் சிந்துபல்சவுக் மாவட்டம் வழியாக மேலம்சி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீரும், குப்பைகளும் தோராயமாக 70 கிலோமீட்டர்கள் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்பட்டதால் மேலம்சி பஜார் கடுமையாகச் சேதமடைந்தது. ஐநா சபையின் மதிப்பீட்டின்படி, 300 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. 1,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தத் பேரழிவு மேலம்சி குடிநீர் திட்டத்தின் உட்கொள்ளும் உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியது.
அடிக்கடி பேரிடர் ஏன்?
நேபாளத்தின் புவியியல் அமைப்பே, அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நதிகள் உயரமான இமயமலைப் பகுதியிலிருந்து குறுகிய பள்ளத்தாக்குகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கீழ் பகுதிகளுக்கு வேகமாக பாய்கின்றன.
அதேபோல, உயர்ந்த மலைகளில் பனிப் பாறைகள் வேகமாக உருகுவது பெரும் வெள்ளத்திற்கு வழிவகுக்கின்றன. 2025ம் ஆண்டு மற்றும் நேற்று ஏற்பட்ட பெரு வெள்ளங்கள், பனிப்பாறைகள் வேகமாக உருகியதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவுகள் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், நேற்று ஏற்பட்ட போதேகோஷி வெள்ளத்தின் காரணமும் இன்னும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது
இந்தியா எல்லா வகையிலும் நேபாளத்திற்கு உதவி செய்ய வேண்டும் . சில வருஷங்களுக்கு முன் தீவிரவாதி நாடாகிய துருக்கி பூகம்பத்தால் பாதிக்க பட்டபோது இந்திய தீவிரவாதியான எர்டோகனுக்கு உதவி செய்தது மிகப்பெரிய தப்பு .மேலும்
-
கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து; பைலட்டுகள் இருவர் பலி
-
உயிர்ம வேளாண்மையில் சாதனை; விவசாயிகள் மூவருக்கு விருது வழங்கினார் முதல்வர் விஜய்
-
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி; இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
-
இந்தியர்கள் 300 பேரை காணவில்லை; நேபாள அரசு அறிவிப்பு
-
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ்
-
நேபாளத்தில் மீட்பு பணி; அரசிடம் அனுமதி கோரும் ஈஷா யோகா