மதுரையில் ரூ.58.65 லட்சம் அரசு இழப்பீடு தொகை கையாடல்: பெண் ஊழியர் கைது

மதுரை: மதுரையில் நான்குவழிச்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தியதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையில் ரூ.58.65 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியர் சாந்தி 35, கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலுார் - காரைக்குடி ரோட்டை நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நிலமெடுப்பு பணியும், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணியும் நடந்தது. இதற்கான பணியை 'தனி தாசில்தார், நிலமெடுப்பு, தேசிய நெடுஞ்சாலை அலுவலகம்' மேற்கொண்டது.

இங்கு மதுரை புதுார் லுார்துநகரைச் சேர்ந்த சாந்தி, கம்ப்யூட்டர் ஆபரேட்டராக 2019 முதல் பணியாற்றி வருகிறார். இழப்பீடு தொகையை நிலஉரிமையாளர்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளை சாந்தி செய்து வந்தார்.

இந்நிலையில் நாவினிப்பட்டி சுமித்ரா என்பவருக்கு ஏற்கனவே இழப்பீடு தொகை வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுப்பப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த தாசில்தார் பிரபாகரன், அதுதொடர்பான பைல்களை ஆய்வு செய்தார்.

சுமித்ராவின் இழப்பீடு தொகையை ரூ.22.42 லட்சத்தை சாந்தி, பெயர் திருத்தம் செய்து தனது வங்கி கணக்கில் வரவு வைத்தது தெரிந்தது.

அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்தது. பணத்தை திருப்பிச்செலுத்தி விடுவதாக கூறி, ரூ.42 ஆயிரத்தை மட்டும் கருவூலத்தில் செலுத்திவிட்டு, அதற்கான சலானில் ரூ.22.42 லட்சம் என ஏமாற்றும் நோக்கில் திருத்தி எழுதினார்.

இதையும் தாசில்தார் கண்டுபிடித்த நிலையில் சாந்தி தலைமறைவானார். இதைதொடர்ந்து மற்ற நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை ஆய்வு செய்ததில் நாவினிப்பட்டி பாண்டியின் ரூ.17.61 லட்சத்தை சாந்தி தன் வங்கி கணக்கில் வரவு வைத்தது தெரிந்தது. அதேபோல் ராமு என்பவரின் இழப்பீடு தொகை ரூ.10.50 லட்சத்தை தனது சகோதரர் சங்கர்குமாரின் வங்கி கணக்கிற்கு சாந்தி அனுப்பியுள்ளார்.

இப்படி சில உரிமையாளர்களின் இழப்பீடு தொகையான மொத்தம் ரூ.58.65 லட்சத்தை போலி ஆவணங்கள் மூலம் சாந்தி கையாடல் செய்துள்ளார். இவ்வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாந்தியை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement