இம்ரானை சிறையிலேயே கொல்ல முயற்சி: மகன்கள் பகிரங்க குற்றச்சாட்டு

2

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, சிறையிலேயே கொல்ல முயற்சி நடப்பதாக, அவரது மகன்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான, பாக்., தெஹ்ரீக் - இ -- இன்சாப் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று, 2023 முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கடுமையான மன அழுத்தம், கண் பார்வை பிரச்னை இருப்பதாக குடும்பத்தினர் கூறினர். தொடர்ந்து, அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த 18ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்த பாக்., அரசின் மனு நிராகரிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின், சமீபத்தில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்நிலையில், இம்ரான் கானின் மகன்கள் சுலைமான், காசிம் கான் ஆகியோர், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எங்கள் தந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சில மணி நேரங்களிலேயே மீண்டும் சிறையில் அடைத்து விட்டனர். அவருக்கு கண்ணில் பிரச்னை உள்ளது. கண்ணில் கட்டு போட்டுள்ளார். அவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார். இதை பார்க்கவே கஷ்டமாக உள்ளது. சிறையிலேயே வைத்து அவரை கொல்ல வெளிப்படையாக முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த குற்றச்சாட்டுகளை பாக்., அரசு மறுத்துள்ளது. தண்டனை பெற்ற கைதியாக இருந்தாலும், புத்தகங்கள், மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட வசதிகள் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்டோர், இம்ரானுக்கு முறையான மருத்துவ உதவிகளை வழங்கும்படி கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement