மரக்கன்றுகள் வளர்க்க தொழிலாளர் ஆர்வம்

திருப்பூர்: 'வெற்றி' அறக்கட்டளையின் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம், பிரித்வி இன்னர்வேர் நிறுவனத்துடன் இணைந்து, திருப்பூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் தொழிலாளர்கள் மூலம் பசுமைப் பரப்பை உருவாக்கும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மங்கலம் அருகே சுல்தான்பேட்டையில் உள்ள பிரித்வி இன்னர்வேர் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடந்த துவக்க விழாவில், வேதாரண்யம், கள்ளக்குறிச்சியில் உள்ள நிறுவன தொழிற்சாலைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.

பிரத்யேக செயலி மூலம் விருப்பம் கேட்டறியப்பட்டதில், முதல்கட்டமாக 1,020 தொழிலாளர்கள் மரக்கன்றுகள் நட முன்வந்தனர். அவர்களுக்கு தலா இரண்டு வீதம், மொத்தம் 2,040 பாரம்பரிய நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேம்பு, சொர்க்கம், புங்கன், இலுப்பை, பூவரசன், பலா, மகோகனி, தான்றி உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நட்டு, அதன் வளர்ச்சியை தொடர்ந்து செயலி வாயிலாக பதிவு செய்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பசுமை திட்டத்தை ஆண்டுதோறும் தொடரவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரித்வி இன்னர்வேர் நிறுவன உரிமையாளர் பாலன், 'வெற்றி' அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் நடராஜ் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement