வட்டார மொழியால் தொழில் முனைவோர் ஆனேன்!
அம்மி, உரல் போன்ற கல் பொருட்களை, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்து, லட்சங்களில் சம்பாதிக்கும் திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள்:
சொந்த ஊர் பேச்சு வழக்கே, என்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது. சமூக வலைதளங்களில் நான் பதிவிடும், என் வீட்டு சமையல் மற்றும் உணவு வகைகளின் காணொளிகளை எங்கள் ஊர் மொழியில் பேசியதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக, 'எளிய முறையில் உளுந்தங்களி செய்வது எப்படி?' என்ற காணொளியை, 77 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தற்போதும், என் தினசரி அனுபவங்களை பதிவிட்டு வருகிறேன்.
நான் பிளஸ் 2 முடித்து விட்டு, ஒரு சிற்ப கலைக்கூடத்தில் கணக்காளராக இரு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது, கருங்கற்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டேன்.
நான் பதிவிடும் காணொளிகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் கிடைத்ததால், கருங்கற்களால் ஆன பொருட்களை சமூக வலைதளம் வாயிலாக விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்து, 'கல்வா ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், 'ஆன்லைன்' கடை உருவாக்கினேன்.
ஆரம்பத்தில், 15,000 ரூபாய் முதலீட்டில், கல் பொருட்கள் விற்பனை செய்யும் என் நண்பரிடம் இருந்து கருங்கல்லில் செய்த அம்மி, இடி உரல், குழி உரல் போன்ற பொருட்களை வாங்கி, ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கினேன்.
இஞ்சி - பூண்டு இடிக்கும் சிறு உரல், மருந்து அரைக்கும் பவுல், முட்டை வடிவ உரல், சந்தனம், மஞ்சள் அரைக்கும் கல், அம்மி, ஆட்டு உரல் என பல பொருட்கள் கல்லில் உள்ளன. சுப நிகழ்ச்சிகளுக்கு பரிசாக தரவும் இதுபோன்ற பொருட்களை வாங்குகின்றனர். 150 முதல், 2,299 ரூபாய் வரையிலான பொருட்களை விற்பனை செய்கிறேன்.
தமிழகம் மட்டுமல்லாமல், வடமாநிலங்களில் இருந்தும், 'ஆர்டர்'கள் வரும். பெங்களூரில் இருந்து நிறைய ஆர்டர்கள் வருகின்றன. தினமும் 25 ஆர்டர்கள் வரை கிடைக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக 3,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது.
அதேநேரம், கருங்கல் பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்துவர் என்பதால், மறுமுறை வாங்குவோர் குறைவு தான். இதனால், புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன். குறைந்த முதலீட்டில் தொழிலை துவங்கினாலும், இப்போது லட்சங்களில் சம்பாதிக்கிறேன்.
சொந்த தொழில் தான் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் கொடுக்கும். சிறு முதலீட்டில் துவங்கினாலும் பரவாயில்லை... தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி நிச்சயம்; துணிந்து களத்தில் இறங்குங்கள்.
மேலும்
-
வழிப்பறி வழக்கு 6 பேர் மீது குண்டாஸ்
-
சிவகங்கை அருகே ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதியின்றி மக்கள் அவதி கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
-
போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
-
சொல்கிறார்கள்
-
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி!
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது; 2,498 பேர் மாயம்!