பாக்., ட்ரோன்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன்கள் ஊடுருவல் முயற்சியை இந்திய பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

இந்திய பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், பயங்கரவாதிகள் ஊடுருவ உதவவும் பாகிஸ்தான் படைகள் ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றன; இருப்பினும், அத்தகைய முயற்சிகள் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாரத் தொடக்கத்தில், கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஒரு பாகிஸ்தான் ஆளில்லா விமானம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. தற்போது பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

உடனடியாக இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷாராகி, வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

அப்பகுதியில் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் எதையும் ட்ரோன்கள் வீசி சென்று இருக்கிறதா என்பதை கண்டறிய தேடுதல் வேட்டை நடக்கிறது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement