கோயில்களில் மணிகள் திருடிய முதியவர் கைது 

திருவாடானை: கோயில்களில் மணிகளை திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார். 16 மணிகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருவாடானை அருகே மங்களக்குடி கிராமத்தில் மகாலிங்கமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கோயிலுக்குள் புகுந்து மணியை திருட முயன்ற போது கிராம மக்கள் பிடித்தனர். திருவாடானை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பனிப்புலான்வயல் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் 65, என தெரிய வந்தது.

இவர் சுற்றுவட்டார கோயில்களுக்கு சென்று அங்கு இரவு நேரத்தில் மணிகளை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கோயில்களுக்குள் புகுந்து அங்கு தொங்கவிடப்பட்டுள்ள வெண்கல மணிகளை திருடி வந்துள்ளார். ஓரியூர் கோட்டையா போன்ற பல்வேறு கோயில்களில் மணிகள் திருடியது தெரிய வந்தது. புகாரில் திருவாடானை குற்றபிரிவு போலீசார் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 16 மணிகள் கைப்பற்றப்பட்டன. 

Advertisement