இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 30:


தஞ்சாவூரில் உள்ள மகர்நோன்புச்சாவடி பகுதியில், பட்டுச்சேலை உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்த கிருஷ்ணய்யர் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதியின் மகனாக, 1926ல், இதே நாளில் பிறந்தவர் உமாபதி.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயிடம் வளர்ந்த இவர், ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தார். பட்டுச் சேலை வரவு - செலவு நோட்டில், ஆங்காங்கே ஓவியங்கள் வரைந்திருந்தார். தணிக்கையின்போது, அதை கண்ட வருமான வரித்துறை அதிகாரி, நோட்டை துாக்கி வீசினார்.

இதையடுத்து, குடும்ப தொழிலை விட்டு, ஓவியராக கடுமையாக பயிற்சி பெற்றார். 'ஆனந்த விகடன், கல்கி, துக்ளக், கலைமகள், அமுதசுரபி, குங்குமம்' உள்ளிட்ட இதழ்களில் வெளியான பிரபல எழுத்தாளர்களின் கதைகளுக்கு ஓவியங்களையும், துணுக்குகள், நகைச்சுவைகளுக்கு, 'கார்ட்டூன்'களையும் வரைந்தார்.

தன் ஓவிய திறமையால் ராஜாஜி, ம.பொ.சி., எஸ்.எஸ்.வாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சோ உள்ளிட்டோரின் பாராட்டை பெற்றார். 'கல்கி, அமுத சுரபி' உள்ளிட்ட இதழ்களின் தீபாவளி மலர்களுக்கு, இவர் வரைந்த புராண, இதிகாச கதாபாத்திரங்கள் மிகவும் பாராட்டப்பட்டன. இவர், தன் 69வது வயதில், 1996, ஆகஸ்ட் 11ல் மறைந்தார்.

இவரது, 100வது பிறந்த தினம் இன்று!

Advertisement