துாத்துக்குடி துறைமுகத்தில் கச்சா பாமாயில் இறக்குமதி

துாத்துக்குடி: துாத்துக்குடி துறைமுகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தளத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது.

துாத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரண்டாவது நிலக்கரி தளம் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

அந்த தளத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் ஏற்றி வந்த கப்பலில் இருந்து சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டது.இதுகுறித்து, துறைமுக ஆணை ய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறுகையில், “துறைமுக பகுதியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள சேமி ப்பு தொட்டிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி தளம் வரை குழாய்கள் இணைக்கப்பட்டு பாமாயில் கையாளப்படுகிறது.

மலேசியா நாட்டின் குனாக் துறைமுகத்தில் இருந்து 9.70 மீட்டர் மிதவை ஆழம் மற்றும் 143 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் 15,000 டன் கச்சா பாமாயிலை ஏற்றிக்கொண்டு, துறைமுகம் வந்தடைந்தது” என்றார்.

Advertisement