கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்

பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி பவுலர்கள் அசத்த, மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 266 ரன் எடுத்தது.

பெங்களூருவில், துலீப் டிராபி கிரிக்கெட் 63வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் கிழக்கு, 'நடப்பு சாம்பியன்' மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற கிழக்கு மண்டல அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

மத்திய மண்டல அணிக்கு கேப்டன் ரஜத் படிதர் (12), யாஷ் ரத்தோட் (27), ஹர்ஷ் துபே (27) சோபிக்கவில்லை. ஆர்யன் ஜுயல் (46) ஓரளவு கைகொடுத்தார். ரிங்கு சிங் (60) அரைசதம் விளாசினார். மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. யாஷ் தாகூர் (30) அவுட்டாகாமல் இருந்தார். கிழக்கு மண்டலம் சார்பில் முகேஷ் குமார், அபிஜித் சர்கார் தலா 3, முகமது ஷமி, குரேஷி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

காவேரப்பா கலக்கல்: மற்றொரு அரையிறுதியில் வடக்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வடக்கு மண்டல அணிக்கு கம்ரான் இக்பால் (76), கேப்டன் கன்ஹையா வதவான் (35) கைகொடுத்தனர். வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது. தெற்கு மண்டலம் சார்பில் வித்வத் காவேரப்பா 4, நிதீஷ், தனய் தியாகராஜன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 40/2 ரன் எடுத்திருந்தது. நாராயணன் ஜெகதீசன் (34), கேப்டன் திலக் வர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement