பட்டா பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது

6


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வீரசோழபுரத்தில் நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்து தர, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. அருண்குமார், 34, கைது செய்யப்பட்டார்.

பொங்கலூரைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி, 76. இவருக்கு சொந்தமான நிலம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வீரசோழபுரத்தில் உள்ளது. அதை உட்பிரிவு செய்து, பட்டா
பெயர் மாற்றம் செய்ய விவசாயி ராமசாமி, வி.ஏ.ஓ. அருண்குமார் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது பெயர் மாற்றம் செய்வதற்கு அருண்குமார் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ரசாயனம் தடவப்பட்ட 30,000 ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில், ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை வி.ஏ.ஓ. அருண்குமாரிடம் விவசாயி வழங்கினார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் வி.ஏ.ஓ. அருண்குமார் என்பவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

Advertisement