ராசிபுரத்தில் தடை செய்யப்பட்ட 25,000 பிளாஸ்டிக் கப் பறிமுதல்

ராசிபுரம்,:ராசிபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், 25,000 பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மொத்த மளிகை பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் ஏராளமான சிறு, குறு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அனைத்து வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி ஒரு சில வியாபாரிகள் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று காலை நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன் உள்ளிட்ட நகராட்சி குழுவினர், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதி பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக பிளாஸ்டிக் கப்புகளை ஏற்றி வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அந்த வாகனத்தில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்ல, 25,000 ரூபாய் மதிப்பில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதிகாரிகள், கப்புகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 'மீண்டும் இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement