விளையாட்டு பக்கத்திற்கு... கடலுார் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு விளையாட்டின் உயர் சான்றிதழ் வழங்கல் 

கடலுார்: கடலுார் அரசு பெரியார் கல்லுாரி மாணவர்கள் 40 பேருக்கு, பல்கலைக்கழக விளையாட்டிற்கான உயர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி 2025–26ம் கல்வியாண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் தமிழகம், கர்நாடகா, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக வீரர்கள் பங்கேற்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக அணி சார்பில் கடலுார் அரசு பெரியார் கல்லுாரி மாணவிகள் 15 பேர் உட்பட மொத்தம் 40 பேர், பென் காக் சிலாட், மல்யுத்தம், பளு துாக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, கையுந்து பந்து, கபடி, கிரிக்கெட், வளைகோல் பந்து, டென்னிஸ், மேஜைப்பந்து, கிராஸ் கண்ட்ரி, மல்லர் கம்பம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். இதனையொட்டி அந்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக விளையாட்டில் உயர் சான்றிதழாகிய பார்ம்–3 வழங்கும் நிகழ்ச்சி கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் வாசுகி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம், 40 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

கணினி அறிவியல் துறை தலைவர் கீதா, வணிகவியல் துறை தலைவர் தமிழ்ச்செல்வன், கவுரவு விரிவுரையாளர்கள் கண்ணதாசன், குணசெல்வி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் மாரிமுத்து, குமணன் செய்திருந்தனர்.

Advertisement