ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது

21


சென்னை: சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான மொழியாக தமிழை அங்கீகரிக்க கோரி, சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இது குறித்து அவர் பேசியதாவது: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மொழி என்று வந்துவிட்டால் நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது. உலக அளவில் 9 கோடி பேரால் தமிழ் பேசப்படுகிறது.

உயிரோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தது என கருதுகிறோம்; சிறப்புமிக்க தமிழ் மொழியானது ஆட்சி, கல்வி, மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம்; மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கையில் பயன்படுத்த அதிகாரம் வழங்க முடியும்.

ஐகோர்ட் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழில் மனுக்கள், ஆவணங்களை சமர்பிக்க உரிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.

தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. ஜனாதிபதியும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். தமிழக சட்டசபை ஒருமனதாக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.


வரவேற்பு




முதல்வரின் தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன; இதையடுத்து தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement