டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்

2


புதுடில்லி: விமானத்தின் சரக்கு அறையில் புகை வந்ததாக சந்தேகத்தின் பேரில், டில்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் லக்னோவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து 155 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டில்லி நோக்கி புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது புகை சூழ்ந்ததாக எச்சரிக்கை வந்தது. விமானத்தின் பின் பகுதி சரக்கு அறையில் புகை வருவதற்கான தானியங்கி எச்சரிக்கை வந்ததை அறிந்து விமானி விமான நிலைய கட்டுப்பாளர் அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டது. பிறகு விமானம் உடனடியாக லக்னோ விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு காலை 8:52 மணிக்கு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகளும் ஊழியர்களும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக உள்ளனர்.
அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை முழுமையாகச் சோதனை செய்ததில், புகை வந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் கண்டறியப்படவில்லை; தொடர்ந்து விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. லக்னோவில் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு, அவர்கள் டில்லி செல்ல மாற்று விமான ஏற்பாடுகளை செய்யப்பட்டது என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement