மத்திய காலணி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள், மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய காலணி தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது.
காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு டிப்ளமோ 2 ஆண்டு படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சி ஒரு ஆண்டு பயிற்சிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி.
விளையாட்டு காலணி உற்பத்தி இளநிலை தொழில்நுட்ப மேற்பார்வையாளர் ஒரு ஆண்டு பயிற்சிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி. காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் ஒரு ஆண்டு பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.
காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பயிற்சி 6 மாத பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி. காலணி தொழில் நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ ஒன்றரை ஆண்டு பயிற்சிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோ ஒரு ஆண்டு பயிற்சி, டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடமும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உண்டு. தேர்ச்சி பெற்று தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வரும் 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.