அமராவதி பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்க கோரிக்கை
உடுமலை: உடுமலை அமராவதி அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கரும்பு பயிர்களை காப்பாற்ற பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும், என, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிடுவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில், தலைவர் சண்முவேலு, செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள அமராவதி அணை பாசன பகுதிகளில், கடும் வறட்சி ஏற்பட்டு, நிலையிலுள்ள கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் காய்ந்து வருகின்றன. அதோடு, நிலத்தடிநீர் பாதிப்பு காரணமாக, கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது, கரூர், தாராபுரம் பகுதி குடிநீருக்காக அமராவதி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதான கால்வாயில் நீர் திறக்கப்படவில்லை. அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன பகுதி முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, பொதுமக்கள் ,கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் நிலைப்பயிர்கள் பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், ஆற்றில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டவுடன், பிரதான கால்வாயில் உடனடியாக உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.