இன்ஸ்பெக்டர்கள் காலி பணியிடங்களால் போலீஸ் ஸ்டேஷன்கள்: சேவைகள் பாதிப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் போலீஸ் சப்டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்கள் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கீழ் செயல்படுவதால் தை நிரந்தர இன்ஸ்பெக்டர்களை நியமிக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ராஜபாளையம் போலீஸ் சப் டிவிஷனில் ராஜபாளையம் வடக்கு, தெற்கு, சேத்துார், ஊரகம், தளவாய்புரம், கீழ ராஜகுல ராமன், மகளிர், போக்குவரத்து போலீஸ் என 9 ஸ்டேஷன்கள் உள்ளன.

இந்நிலையில் ஒரே மாதத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் ராஜபாளையம் சுற்று பகுதியில் நடந்ததை அடுத்து தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் குருவத்தாய் மாற்றப்பட்டார். பழைய பஸ் ஸ்டாண்ட் பயணி கொலை வழக்கில் தெற்கு இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சேத்துார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் பயிற்சிக்காக நீண்ட விடுமுறையில் உள்ள நிலையில் ராஜபாளையம் வடக்கு, தெற்கு, சேத்துார், தளவாய்புரம் என நான்கு முக்கிய போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் இல்லை.

தெற்கு போலீஸ் ஸ்டேஷனை சாத்துார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சமீரா பானு , வடக்கு போலீஸ் ஸ்டேஷனை கீழ ராஜ குல ராமன் இன்ஸ்பெக்டர் பூமா, தளவாய்புரம் போலீஸ் ஸ்டேஷனை வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வளர்மதி, சேத்துார் போலீஸ் ஸ்டேஷனை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா என கூடுதல் பொறுப்பில் நிர்வகித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

பிரச்சனையான இப்பகுதிகளில் பொறுப்பு அதிகாரிகளின் கீழ் செயல்படும் போலீஸ் ஸ்டேஷன்களில் நிர்வாக ரீதியாகவும் பொது மக்களுக்கு சேவை வழங்குவதிலும், நீதிமன்ற ஆவணங்களில் கையெழுத்திடுவது, எப்.ஐ.ஆர் பதிவிடுவதில் தாமதம், கீழ்நிலை ஊழியர்களை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இது தவிர இந்த ஸ்டேஷன்களை அனைத்தும் மகளிர் பொறுப்பு அதிகாரியாக அமைந்துள்ளதும், ஏ.எஸ்.பி., சைண்டேன் ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் இல்லாததும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே இன்ஸ்பெக்டர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்றனர்.

Advertisement