இடைத் தேர்தலில் யாரெல்லாம் வீட்டில் இருந்தே ஓட்டளிக்கலாம்

புதுச்சேரி: இடைத்தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் வகையில், தபால் ஓட்டுவசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் அக்., 6ம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் விதிகளின்படி, ஓட்டுச்சாவடிக்கு நேரில் வர இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுபோடும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தபால் ஓட்டு வசதியைப் பெற விரும்பும் தகுதியுள்ள வாக்காளர்கள், படிவம்–12டி இ-ல் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தட்டாஞ்சாவடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரால் நியமிக்கப்படும் சிறப்பு ஓட்டுபதிவுப் பிரிவு நேரடியாக வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்குகளைப் பெறும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் விதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு முழுமையாகச் செயல்படுத்தப்படும். எனவே, தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும். இடைத்தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை அடைய ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement