ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் மீட்பு; வனத்துறை விசாரணை

புவனேஸ்வர்: ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியின் போது மீட்கப்பட்டு உள்ளன; இந்தப் பூர்வீகமற்ற இனம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து வனத் துறையினர் விசாரிக்கின்றனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில் உள்ள ரணகதா வனப்பகுதியில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்; அப்போது 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகளை கண்டுபிடித்தனர். உடனே அந்த குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

ஒராங் உடான்கள் என்பவை செம்பழுப்பு நிற உரோமங்களைக் கொண்ட, மரங்களில் வாழும் பெரிய, அறிவார்ந்த மனிதக் குரங்குகள் ஆகும். இவை இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையே பிரிந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவின் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

அங்கு மட்டும் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. அவை இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல. "ஒராங் உடான்" என்ற பெயர், "காட்டு மனிதன் " என்று பொருள்படும்; இந்தோனேசிய வார்த்தைகளிலிருந்து வந்தது. இந்த அரிய வகை விலங்குகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழித்து, முக்கியமாகப் பழங்கள், இலைகள் மற்றும் பிற தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. தற்போது மீட்கப்பட்டுள்ள ஒராங் உடான் குட்டிகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரையிலான அந்த விலங்குகளில், மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் விலங்குகள் அடங்கும். நாங்கள் அவை அனைத்தையும் மீட்டுவிட்டோம். இந்தியாவில் ஒராங் உடான் விலங்குகள் இனமே கிடையாது; இந்த விலங்குகள் நிச்சயமாக சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். பிறகு வனப்பகுதியில் விடப்பட்டு இருக்க வேண்டும். கடத்தல் ஒரு சாத்தியமாக இருந்தாலும், இதுவரை உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை.

அவற்றின் இயற்கையான வாழ்விடம் வெப்பமண்டல மழைக்காடுகள் என்பதால், அவை இயற்கையாக அங்கு இடம்பெயர்ந்திருக்க முடியாது, இது மனிதத் தலையீடு இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. அவை அங்கு எப்படி வந்தன என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

காயங்கள் ஏதுமின்றி மீட்கப்பட்ட ஒராங் உடான்கள், முழுமையான மருத்துவப் பரிசோதனைக்காக நந்தன்கானன் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு மீட்கப்பட்ட ஒராங் உடான்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

அவை பாதுகாப்பாக உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் அரிய வகை விலங்குகள் கைவிடப்பட்டுள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.


ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!

ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் மீட்பு; குட்டிகள் மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோ வைரல்.

தினமலர் ரீல்ஸ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement